அமுதன் R.P.
Friday, February 2, 2024
விஜய் ஆரம்பித்த இக்கற்ற கட்சி!
Wednesday, February 1, 2023
பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் ஒரு நல்வரவு!
பிபிசி தயாரித்த மோடி பற்றிய ஆவணப்படம் பலவிதங்களில் நமக்கு முக்கியமான ஆவணம்.
நாம் பல சமயங்களில் சங்கிகளுடனும் பக்தர்களுடனும் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் முட்டி மோதிக்கொண்டிருக்கும் போது எப்போதும் எல்லாத்தரவுகளுடனும் இருப்பதில்லை. நாம் ஒன்றை எழுப்பினால் சங்கிகள் இன்னொன்றைப் பேசுவார்கள். நாம் அதற்கு பதில் சொன்னால் வேறொன்றுக்குப் போவார்கள். எப்படியாவது நமது முதன்மையான புகாரிலிருந்து விவாதத்தை எங்கோ நகர்த்திச்சென்று நம்மை அயர்ச்சி அடையச் செய்வதோடு, நாம் எழுப்பிய கேள்வியின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச்செய்வார்கள்.
மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் இந்த சித்து விளையாட்டை முறியடிக்கிறது. மோடி மேல் கணக்கில்லா குற்றச்சாட்டுக்களை வைக்காமல், குஜராத் இனப்படுகொலை, ஹரேன் பாண்டியா படுகொலை, அதைக் கேள்வி கேட்ட காவல்துறையினர் கைது, குல்பர்க் சொசைட்டியில் கலவரக்காரர்களால் தமது தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் மோடியாடு தொலைபேசியில் பேசிய முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட 60 பேர், அப்போது இங்கிலாந்திலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று முஸ்லீம்களின் படுகொலை, அதில் கிடைக்காத நீதி என முதல் பாகத்தில் அளவான புகார்களை நிதானமாக, ஆதாரங்களுடன் வைக்கிறது. அது மட்டுமின்றி வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பாஜக பிரமுகர் ஸ்வபன் தாஸ் குப்தா, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி மற்றும் ஒரு பாஜக ஆதரவாளர் ஆகியோரது கருத்துக்களைப் பதிவு செய்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் மறுப்பு இல்லாமல் சேர்க்கப்படவில்லை.
இரண்டாவது பாகத்தில் மாட்டுக்கறி படுகொலைகள், காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டது, சிஏஏவிற்கு எதிரான மக்கள் போராட்டம், அதை காவல்துறையினரை, அடியாட்களை, சங்கிகளை வைத்து முறியடித்தவிதம், பல்கலைக் கழக மாணவர்கள் அவர்களது வளாகத்திற்குள்ளேயே கொடூரமாகத் தாக்கப்பட்டவிதம் என குறிப்பான சிலவற்றை மீண்டும் ஆதாரங்களுடன், மறுப்புடன், நிதானமாக, ஆழமாக இந்தப் படம் விவாதிக்கிறது.
சுயபுத்தியுள்ள, பகுத்தறிவுள்ள, குறைந்த பட்சம் சுரணையுள்ள எந்த மனிதருக்கும் இந்த இரண்டு பாகங்கள் எழுப்பும் கேள்விகளின் நியாயம் புரியும்.
இந்தப்படத்தை ஒரு வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம், அதுவும் ஆயிரக்கணக்கான ஆவணப்படங்கள் எடுத்த அனுபவம் கொண்ட பிபிசி நிறுவனம் எடுத்திருப்பதால் உள்ளூர் அரசியலின் தாக்கமில்லாமல், தள்ளி நின்று, பொதுவான மனிதர்களையும் சேரும் வண்ணம், அவர்களும் நம்பும் வண்ணம், மிகவும் கச்சிதமாக திரைக்கதை (பல தொலைக் காட்சி ஆவணப்படங்கள் எழுதித் தான் எடுக்கப்படுகின்றன) உருவாக்கமும் படத்தொகுப்பும் நிகழ்ந்திருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களையும் கிளாசிகல் தொலைக்காட்சி புலனாய்வுப் படங்கள் என்று உறுதியாகத் துணிந்து சொல்லமுடியும். முக்கியமாக முரட்டு அடி, மட்டை அடி என போகிற போக்கில், அவசரகதியில், பொத்தாம் பொதுவாக எந்தக் காட்சியும் இல்லை. அதே போல ஒரு பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பதால், பல தரப்பட்ட கோப்புக் காட்சிகள் பல இடங்களில் இருந்து கவனமாகச் சேகரிக்கப்பட்டு படத்தில் சரியான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல நாடுகளுக்கு, மாநிலங்களுக்கு பல ஊர்களுக்கு இந்தப் படம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை விவாதிக்கத் தேவையான அனைத்துத் தரவுகளும் போதுமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான நேரம் ஓவ்வொரு விவாதப்பொருளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்றே சொல்லமுடியும். ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டால் அதை பட்டிமன்ற ரீதியில் கேலிக்கூத்தாக்கி, உணர்ச்சிமயமாக்கி, பேசவேண்டிய பொருட்களைப் பேசாமல், குத்துச்சண்டை மாதிரி விவாதம் நடத்தும் இவர்களுக்கு இந்த படத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஏனெனில் நம்மிடம் பணம் இருக்கிறது. ஆனால் ஆவணப்படம் எடுப்பதற்கான மெனக்கெடல் இல்லை. அது அவ்வளவு முக்கியம் என்றே நாம் நினைப்பதில்லை. கதை சொல்லியே காலம் கடத்திவிடமுடியும் என்பதால் தான் சீமான் நம் ஊரில் பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார்.
ஆவணம் என்பதே கூடாது என்று நினைக்கிற ஆரியக் கூட்டத்தின் அடிமைகள் தானே நாம்! எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், காதும் காதும் வைத்த மாதிரி தானே பார்ப்பனியம் தமது ஆதிக்கத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்திவருகிறது.
பிபிசி தயாரித்த மோடி பற்றிய இந்த ஆவணப்படம் மோடியைப் புரிந்து கொள்ள உதவுவதோடு, ஆவணப்படம் என்ற வடிவத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்று ஒரு ஆவணப்பட இயக்குனராக, ஆவணப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளராக, நான் உறுதியாக நம்புகிறேன்.
மீம்ஸ் மாதிரி நொடிப்பொழுது சம்பாஷனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இரண்டு மணி நேர ஆவணப்படம் வந்திருப்பதும் அது வெகுமக்களை பெரிதும் பாதித்திருப்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வெனக் கூறலாம். இப்போதெல்லாம் யார் பெரிய படங்கள் பார்ப்பார்கள் என்று வியாக்கியானம் செய்யாமல், நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க, இப்படி ஆழமான உரையாடல்களை நம்மிடையே உருவாக்குவோம்.
இதே போல பல புலனாய்வு ஆவணப்படங்கள் தமிழில் வரவேண்டும். அதை இங்கிருக்கும் கட்சிகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும், மக்கள் இயக்கங்களும் முன்னெடுக்கவேண்டும். வெறும் வாய்ச்சவடால்களால் தொடர்ந்து காலம் கடத்திவிடமுடியாது. குறிப்பாக அறிவே கூடாது என்று வெறித்தனமாக அரசியல் செய்யும் சங்கிகள் மத்தியில் அவர்களைப் போல வெற்றுக்கூச்சல் சாக்கடையில் விழுந்து புரளாமல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரும், சாக்ரடீசும், அரிஸ்டாட்டிலும், ப்ளேட்டோவும் உருவாக்க நினைத்த அறிவுச்சமூகத்தை நோக்கி முன்னேறுவோம்.
Thursday, October 6, 2022
இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள்!
இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய ஒரு ஆய்வின் சில முடிவுகள்!
1) இந்தியாவில் பெருவாரியான ஆண்களும் பெண்களும், வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் போது ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.
2) இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களே, பெண்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகின்றனர் என்று கருதுகின்றனர்.
3) நான்கில் மூன்று பகுதி மக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு பெரிய பிரச்சனை என்று கருதுகின்றனர்.
வழக்கத்தில் பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆண்களே வேலைக்குப் போகவேண்டும் என்று இருக்கிறது.
சம்பளத்திற்கு பெண்கள் வேலை பார்ப்பது கீழானது என்று கருதப்படுவதோடு, சமூக விழுமியங்கள் நல்ல தாயாக, மனைவியாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் பெண்கள் தேர்ந்தெடுப்பதை தடுக்கின்றன.
பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்க போஷ் சட்டம் 2013ல் (POSH Act 2013) நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் பல பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு அல்லது வன்முறைக்கு ஆளாகின்றனர்.
ஆண் - பெண் மக்கள் தொகை வேறுபாடும் இருக்கிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 918 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். பாலினத் தேர்வு கருக்கலைப்பும், சிசுக்கொலையும் இந்த வேறுபாட்டை அதிகரிக்கின்றன.
இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் சராசரி வயது 28.7 ஆகும். அமெரிக்காவில் அது 38.5 ஆக இருக்கிறது. ஆனால் வாய்ப்புகள் இல்லாததால், 15-29 வயதிற்குள் உள்ள பெண்களில் 45% பேர் படிப்பிலோ, வேலையிலோ, பயிற்சியிலோ ஈடுபடாதிருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டு பழமையான ஜாதி முறை, சில குறிப்பிட்ட வேலைகளைத் தேர்ந்தெடுப்பதைப் பாதிக்கிறது.
கல்வி கிடைப்பதிலும் வேலையிலும் ஜாதியப் பாகுபாட்டை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்திருந்தாலும் ஜாதியை அது தடை செய்யவில்லை.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மதரீதியான மக்கள் தொகை கீழ்வருமாறு :
இந்துக்கள் : 79.8%
இஸ்லாமியர்கள் : 14.2%
கிறிஸ்தவர்கள் : 2.3 %
சீக்கியர்கள் : 1.7%
பிற : 2%
இந்தியாவில் இருக்கும் பல இன, மத, மொழி, பண்பாடு, புவியியற் கூட்டுத்தன்மை நமது சிந்தனையில் ஒற்றை அடையாளத்திற்கு மாற்றாக பன்முகத்தன்மையைக் கொடுத்தாலும், பல்துறை குறுக்குவெட்டுப் பாகுபாடு (intersectional discrimination) சில பெண்களை மற்றவர்களை விட அதிகம் பாதிக்கிறது.
15% இஸ்லாமியப் பெண்களே முறையான வேலைக்குப் போகின்றனர். அவர்களோடு ஒப்பிடும் போது
இந்துப்பெண்கள் : 27%
கிறிஸ்வதப்பெண்கள் : 31%
புத்தப்பெண்கள் : 33 % வேலைக்குப் போகின்றனர்.
இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக வளர்ந்து வருகிறது. வரும் பத்தாண்டுகளில் 3 டிரில்லியினில் இருந்து 8 டிரில்லியனாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்பங்களை வசப்படுத்துதல், நகரமயமாதல், வெகுசன நுகர்வு கலாச்சாரம் மற்றும் நிதிப் பங்கீடு ஆகியவைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 19% பேர் மட்டுமே இந்தியாவின் (சம்பாதிக்கும்) தொழிலாளர் பட்டியலில் வருகின்றனர். ஒப்பீடு செய்யும் போது 70% ஆண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
இந்த இடைவெளியைக் குறைத்தால் இந்தியாவின் ஜிடிபி (GDP) மூன்று மடங்காக 2050ல் வளரும் என்று கணிக்கப்படுகிறது.
பல துறைகளில் பெண்கள் மிகவும் குறைவாகவே வேலை செய்கின்றனர்.
எண்ணெய் மற்றும் வாயு துறை : 7% பேர் தான் பெண்கள்
மருந்து மற்றும் மருத்துவம் : 11%
தகவல் தொழில்நுட்பம் : 28%
வாகன உற்பத்தி : 10%
2030ல் எந்திரமயமாதலின் காரணமாக ஒரு கோடியே 20 லட்சம் பெண்கள் வேலை இழக்க வாய்ப்பிருக்கிறது.
2021ல் 4.7% இடங்களில் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்பிலும் (CEO) 7.7% இடங்களில் மட்டுமே (நிறுவனங்களின்) நிர்வாக சபையிலும் (Board) இருக்கின்றனர்.
ஆங்கிலத்தில் : Workplaces that Work for Women
மொழிபெயர்ப்பு : அமுதன் ஆர்.பி.
https://www.catalyst.org/research/women-in-the-workforce-india/
Tuesday, July 26, 2022
போய் வாருங்கள் சக்ஸ்!
Saturday, January 8, 2022
"நமக்கு எதற்கு இவ்வளவு மின்சாரம்?" - அமுதன் ஆர்.பி.
Wednesday, March 24, 2021
மொழிபெயர்ப்புக் கவிதைகள் : அமுதன் ஆர்.பி.
மொழிபெயர்ப்புக் கவிதைகள் : அமுதன் ஆர்.பி.
1) தூசியில் நிரந்தரமாய்
- உருதுக் கவிதை
எழுதியவர் : தரந்நும் ரியாஸ்
ஆங்கிலத்தில் : மீரான் பஞ்சாபி
மரங்களின் ஊடே காற்று நடனமாடும்
தோட்டங்களில் பறவைகள் பாடும்
ஆற்றுக்குள் தண்ணீர்க் கலந்தோடும்
புற்களின் மீது பனித்துளிகள் கசியும்
மலையுச்சிகளை மாலை மஞ்சள் கரைக்கும்
வயல்களின் வழியே சிறுவர்கள் ஓடி ஆடுவர்
ஜூலியட்டுகள் ரோமியோக்களைச் சந்திப்பர்
தமது குழந்தைகளுக்கு தாய்மார்கள்
தாலாட்டுப் பாடுவர்
என் இருப்பின் ஒரு கைப்பிடிச் சாம்பல்
தூசியில் நிரந்தமாய்த் தொலைந்து போகும்
தமிழில் : அமுதன் ஆர்.பி.
2) நிவாரணம் அற்றது
- உருதுக் கவிதை
எழுதியவர் : யாக்கின்
ஆங்கிலத்தில் : எட்வர்ட் பாய்ஸ் மாத்தர்ஸ்
அரசனின் வீட்டை விட
என் அன்பானவளின்
நிலைப்படியையே நான் விரும்பவேன்;
தில்லியின் மாளிகைகளை விட
அவளது அழகு மறையும் சுவற்றின் நிழலையே நான் விரும்புவேன்.
வசந்தகாலம் வரை ஏன் காத்திருந்தாய்?
முட்கள் நிறைந்த சிவந்த ரோசாப்பூக்கள்
என் கைகளில்
ஏற்கனவே நிறைந்திருக்கவில்லையா?
என் இதயம் உனக்கானது,
ஆகையால் யாக்கின், யாக்கின், யாக்கின், முட்டாள் யாக்கின்
என்று எந்த இதயம் புலம்புகிறது என்பதை
நான் அறிய வேண்டாம்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
3) இதோ கடவுள் வருகிறார்
-
தெலுங்குக் கவிதை
எழுதியவர் : தேனேத்தி
சூரி
ஆங்கிலத்தில் : வெல்சேரு
நாராயண் ராவ்
இதோ கடவுள் வருகிறார்,
வெண்கலத்தில் உயிரற்று,
தெருவெங்கும் சுற்றி,
மரக்குதிரையில் பயணித்தபடி
அவரிடம் கூலியைப்
பற்றிக் கேளுங்கள்,
நண்பர்களே.
நமக்குப் போதுமான
உணவில்லை
என்று அவரிடம் கூறுங்கள்.
கல்லும் கறையும்
என்று
சான்றோர்கள் சொல்வார்கள்.
அது உண்மையா என்று
பார்ப்போம்.
தாழ்பணிந்து கேளுங்கள்,
அவர் கேட்கிறாரா என்று
பாருங்கள்,
அவர் பதில் கூறாவிட்டால் போகட்டும்.
கைகளை உயர்த்துங்கள்
லட்சக்கணக்கில் ஒன்றாக
குரல்களை எழுப்புங்கள்
வானமே நடுங்கட்டும்.
அவரிடம் கூலியைப்
பற்றிக் கேளுங்கள்
நண்பர்களே.
நமக்குப் போதுமான
உணவில்லை
என்று கூறுங்கள்.
தமிழில் : அமுதன்
ஆர்.பி.
4) பிரியாவிடை
- அஸ்ஸாமியக் கவிதை
எழுதியவர் : ஜிபேன் நரா
ஆங்கிலத்தில் : லிரா நியோக்
அவள் விடைபெற்ற நாளில்
எங்கள் தங்கை தாங்கமுடியாத வெற்றிடத்தை தனது இருப்பில் விட்டுச்சென்றாள்.
தனியாகப் பாடுவது அவளுக்குப்பிடிக்கும் என்பதாலே அவளுக்கென்று ஒரு அறை கட்டப்பட்டது.
அவளது பாட்டின் சோக அதிர்வு அந்த அறையெங்கும் விரவிக்கிடக்கிறது - அது எங்களை அவ்வப்போது இப்போதும் காயப்படுத்துகிறது.
தான் காதலித்த இளைஞனோடு எங்களை விட்டு நிரந்தமாகப் பிரிந்தாள் - அதுவே வழக்கம் என்றாலும்
அதை ஏற்பது எளிதன்று.
அவளுக்கு சிமலுப் பூக்கள்* பிடிக்கும்
என்பதாலே அவள் அந்த நதியிடம் பொய் சொன்னதேயில்லை.
அந்த நதியின் கடைமடைக்குப்
பயணித்த நாளே
அவளது துயரம் வளரத்தொடங்கியது.
*சிமலு : பட்டுப்பருத்தி மரம்
தமிழில் : அமுதன் ஆர்.பி.
5) கேட்காதீர்!
கன்னடக்கவிதை:
எழுதியதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும்:
ஹச் எஸ் சிவப்பிரகாஷ்
எரியும் நண்பகல் அமைதிக்குள்
தண்ணீர்க் கொணர்ந்தது யார் என்று என்னைக் கேட்காதீர்
நரகத்தின் எனது சிறைக்குள் எனக்கு வெளிச்சம்
கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்
சிதை நிரம்பிய மயானத்திற்குக்
குளிர்காற்றைக் கொணர்ந்தது யார்
என்று கேட்காதீர்
கவிதை ஒன்றை சந்தையின் இரைச்சலுக்கும்
ஓட்டத்திற்கும் கொணர்ந்தது யார் என்று கேட்காதீர்
பஞ்சத்தால் சிதைக்கப்பட்ட என்
நிலத்திற்கு வசந்தத்தைக் கொணர்ந்தது
யார் என்று கேட்காதீர்
சிவப்பிரகாஷ் என்று சொல்லாதீர். நானில்லை, அது நீங்கள், நீங்கள் மட்டும் தான்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
6) நினைவுக்குறிப்பு
- உருதுக் கவிதை
எழுதியவர் முகம்மது அல்வி
ஆங்கிலத்தில் : அனிசுர் ரஹ்மான்
நான் கல்லறையை அடைந்தவுடன்
எனது கைகால்களை நீட்டிக் கிடத்தினேன்
யாரும் என்னை இப்போது தொந்தரவு
செய்யமாட்டார்கள் என்று
எண்ணிக்கொண்டு
இந்த இரண்டடி நிலம் எனக்குத்தான் என்று
மண்ணாய் மாறிக்கொண்டேயிருந்தேன்
காலத்தை மறந்தபடி
ஆனால் விரைவில் என் அமைதி குலைக்கப்பட்டது
யாரோ ஒருவர் என் கல்லறைக்குள்
நுழைந்தார்
இப்போது அவரது நினைவுக் குறிப்பு
எனது கல்லறைச் சின்னத்தில்
எழுதப்படுகிறது.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
7) துணிதல்
டோக்ரி மொழிக் கவிதை
எழுதியவர் : பத்மா சச்தேவ்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : அமண்டா பெல்
எங்கள் குன்றின் வலப்புறமிருக்கும்
கிணற்றில் இருந்து யாரும்
தண்ணீர் குடிப்பதில்லை,
அது தெளிந்த நீருடன்
ததும்பினாலும்;
அந்தப்பக்கம் யாரும்
திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
அதன் ஆழத்தில் ஒரு கன்றுக்குட்டி
மிதக்கும் பூக்களால் ஏமாற்றப்பட்டு
மூழ்கிப்போனதால்.
அதன் அடிஆழத்தில், பானைகளுடன் வரும் சிறுமிகளுக்காக நிழல்கள் ஏங்கும்.
பகல் வெளிச்சத்தில் முழுமையாய்த்
தம்மைப் பருகச்சொல்லித்
தண்ணீர் என்னை மன்றாடும். இரவில் நான்
அதன் இருட்டில் யாரும் காணாது
குளிப்பேன், அதன் குளுமையை என்
உள்ளங்கையில் கவர்ந்தபடி
என் வாயருகே ஏந்துவேன் -
என் தாகம் காதலைப் போல நிறைவடையாதது.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
8) நெடுஞ்சாலையில் புத்தர்
மலையாளக் கவிதை
எழுதியவர் : கல்பட்டா நாராயணன்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் :
கே. சச்சிதானந்தன்
புத்தர் நேற்று அந்தச் சாலையைக்
கடப்பதைக் கண்டேன்.
மாலை நெரிசலில்
சாலையைக் கடக்க இயலாது
இந்தப் பக்கம்
நீண்ட காலம் காத்திருந்தேன்.
ஐம்பது அறுபது எழுபது ஆண்டு
வாழ்க்கையில்
எப்படி நாம்
ஒன்று ஒன்றரை ஆண்டு காலம்
சாலையைக் கடக்கக்
காத்திருக்கிறோம் என்பதை
நினைத்தபடி.
அவர் சாலையைக் கடந்தார்
மெதுவாக, பயமின்றி.
அவரை நான் தொடரத் தொடங்கையில்
ஒரு வாகனம் பிளிறியபடி
என்னை வேகமாய்க்
கடந்து போனது.
எந்த வாகனமும் அவருக்காக
வேகத்தைக்
குறைக்கவில்லை;
யாருமற்ற, அகலமான, எப்போதும் இருந்த
அந்தக் காட்டுப்பாதையை ஒட்டி
அவர் நடந்து போய்
மறுபக்கத்தை அடைந்தார்.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
9) நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்!
- வங்காளக்கவிதை
எழுதியவர் : ஜாய் கோஸ்வாமி
வெட்டு மேடையின் கீழே அந்தக் கீரையை வை
நான் ஒரு பலி ஆட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்
அது தனது முந்தைய தலை சீவலை மறந்திருக்கிறது
ஆனாலும் அதன் கழுத்தில் அந்தக் காயம் ஒரு மாலை போல பதிந்துள்ளது.
ஆங்கிலத்தில் : சம்பூர்ண சாட்டர்ஜி
தமிழில் : அமுதன் ஆர்.பி.
10) பரம்பரை
- மலையாளக்கவிதை
எழுதியவர் : ஆத்தூர் ரவிவெர்மா
ஆங்கிலத்தில் : கே.சச்சிதானந்தம்
கோடுகளையும் சதுரங்களையும் கொண்ட
வெள்ளை அரசின் கொடியை தாத்தா நேசித்தார்;
அவர் கிராம அதிகாரியாக இருந்தார்.
அப்பா ஒரு மூவர்ணக்கொடியை ஏற்றினார்.
அவர் ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்.
நான் செங்கொடியை ஏந்துகிறேன்.
என் பேரனின் கைகள்
ஐம்பது நட்சத்திரங்கள் கொண்ட
அமெரிக்கக் கொடியைத் தூக்கிப் பிடிக்கின்றன.
தமிழில் : அமுதன் ஆர்.பி.
Thanks to ‘100 More Great Indian
Poems’, edited by Abhay K, Published by Bloomsbury, 2019.